போலி ஆவணங்களுடன் கட்டுநாயக்கவில் ஐவர் கைது: விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு பயணிக்கும் நோக்கில் போலியான ஆவணங்களுடன் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் இத்தாலியின் மிலான் மல்பென்சா விமான நிலையத்தை அடைந்த பின்னர், தங்களுடைய பயண ஆவணங்களைக் கிழித்து, தஞ்சம் கோரி, ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லும் முயற்சியை மேற்கொள்ளவிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போலி ஜேர்மன் கடவுச்சீட்டுகள் மூலம் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போது புத்தளம் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் குடிவரவு அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
போலி ஜேர்மன் கடவுச்சீட்டுகள்
இவர்கள் மாலைத்தீவுக்கு சென்று அங்கிருந்து இத்தாலியை நோக்கி பயணிக்கும் நோக்கத்தை கொண்டிருந்தனர். எனினும் அவர்களில் இருவரிடம் இருந்த போலியான இரண்டு ஜெர்மனிய கடவுச்சீட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தியபோதே அவர்கள் ஐந்துபேரும் தஞ்சம் கோரப்போகும் தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையான உள்ளூர் கடவுச்சீட்டுகளுடன் இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் மாலேயில் இருந்து போலி ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் ஜேர்மனி செல்லும் விமானத்தில் ஏறுவதே அவர்களது திட்டமாக இருந்துள்ளது.
அத்துடன், போலி ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் பிராங்பேர்ட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் இத்தாலியின் மிலான் மல்பென்சா விமான நிலையத்தில் தங்களுடைய பயண ஆவணங்களைக் கிழித்துவிட்டு தஞ்சம் கோரி விண்ணப்பிக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட ஐவரும் தொடர்ந்தும் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |