சட்டத்தை மீறி விற்பனை செய்யப்படும் சொக்லேட் மற்றும் இனிப்புக்களை தேடி வேட்டை!
இலங்கையில் நடைமுறையிலுள்ள உணவு சட்டத்தை மீறி விற்பனை செய்யப்படும் சகல சொக்லேட் மற்றும் இனிப்பு வகைகளையும் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் (21.03.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
மேலும், “நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இனிப்பு மற்றும் சொக்லேட் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சொக்லேட் - இனிப்புகள்
இந்த நிலையில், சில வர்த்தகர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு சொக்லேட் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளைக் கொண்டு வந்து விற்பனைக்கு விநியோகம் செய்வதாகத் தெரிய வந்துள்ளது.
உணவுச் சட்டத்தின்படி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விற்கப்படும் உணவுப் பொருட்களில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது? உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி திகதி மற்றும் காலாவதி ஆகியவை இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் இரண்டு மொழிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
கைப்பற்றுவோம்...!
அத்தகைய குறிப்புகளுடன் விற்கப்படும் உணவுப் பொருட்கள் சட்டப்பூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் மட்டுமே விற்பனை முடியும். எனவே, சிலர் உணவு சட்டத்தை மீறி சொக்லேட் மற்றும் இனிப்புகளை விற்பனை செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
எதிர்வரும் நாட்களில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்படும் சகல சொக்லேட்கள் மற்றும் இனிப்புப் பொருட்களையும் கைப்பற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.