சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை குறைப்பு!எழுந்துள்ள புதிய சர்ச்சை
சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விற்பனை வீழ்ச்சி
சீனா சினோபெக் நிறுவனம் ஒக்டேன் ஒரு லீட்டர் 92 ரக பெட்ரோலினை 358 ரூபாவிற்கும், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனம் ஆகியவை ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலினை 365 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது.
இந்நிலைமை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இதுவரையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஏறக்குறைய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
எரிபொருள் பிரிவினையாளர்கள் எதிர்ப்பு
எவ்வாறாயினும், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் எரிபொருள் பிரிவினையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினோபெக் நிறுவனம் முன்வைத்த ஒப்பந்தங்களை அவர்கள் பணிகளை தொடங்கும் முன் பூர்த்தி செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சினோபெக் குறைந்த விலையில் எரிபொருளை விற்கும்போது, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனங்கள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பது நியாயமற்றது என பெட்ரோலியக் பிரிவினையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படாததால், அதற்கு எதிராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.