பிரித்தானிய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்: புலம்பெயர்வோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் - பிரித்தானியப் பிரதமர்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பிரித்தானியாவுக்கு குடிபெயர்பவர்களுக்காக நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான விசா
நிபந்தனைகள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் வெளிநாட்டவரைக் குறைப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் புதிய நடடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அதிகரித்து வரும் புலம்பெயர்ந்தவர்களின் வருகை கடந்த ஆண்டு (2022) 745,000 ஆக உயர்வடைந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களுக்கான விசா நடைமுறையிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விசா, வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களாக வருபவர்கள் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது.
கடுமையான நடவடிக்கைகள்
மேலும், தொழிலாளர் விசா விண்ணப்பத்திற்கான வரம்பு £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்வடைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி குடும்ப விசாவிற்கான குறைந்தபட்ச விண்ணப்பத்திற்கான வரம்பு £18,600 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலமாக பொருளாதார ரீதியான ஆதரவு தரக்கூடியவர்களை மாத்திரமே பிரித்தானியா உள்வாங்கவுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக படகுகளில் குடியேறும் நபர்களின் வருகையை குறைக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.