கோட்டாபயவின் ஆசனம் அருகில் இருக்க முடியாது! கடும் வெறுப்பில் சந்திரிக்கா புறக்கணிப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, கோட்டாபய அருகில் அமர்வதை விரும்பாது அருகிலுள்ள மேசையை தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற சீன மக்கள் குடியரசின் 74 ஆவது ஆண்டு நிகழ்வில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நிகழ்வில் சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டதுடன் இவர்கள் நால்வருக்கும் ஒரே மேசையில் அமர்வதற்கான நான்கு நாற்காலிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
கோட்டாபயவின் ஆசனம்
இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்ஹொங் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மிக முக்கிய பிரமுர்கள் வரிசையில் இந்த நால்வரே பிரதானமாக இடம்பிடித்திருந்தனர்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அருகில் கோட்டாபயவின் ஆசனம் இருந்ததால் சந்திரிக்கா அவர் அருகில் அமர்வதை விரும்பியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சிக் காலத்தில் ரணில் மற்றும் மைத்ரியுடன் இணைந்து பயணித்த சந்திரிக்கா இடையில் மைத்ரி மகிந்தவை திடீரென பிரதமராக்கி நாடாளுமன்றத்தை கலைத்தவுடன் அவரை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்த மகிந்தவும் அதன் பிறகு சந்திரிக்காவை ஓரங்கட்டிவிட்டு சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.
ஜனாதிபதி பதவிக்கு இழுக்கு
கோட்டாபய ஜனாதிபதியாகுவதை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்த சந்திரிக்கா அவர் இடையில் நாட்டை விட்டு வெளியேறியவுடன் ஜனாதிபதி பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தியவர் என ஒரு சந்தர்ப்பத்தில் கோட்டாபயவை விமர்சித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்ரி, கோட்டாபய ஆகிய மூவர் மீதும் சந்திரிக்கா வெறுப்புடனேயே இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றைய நிகழ்வில் இந்த மூன்று பேருடனும் அமர்வதற்கு அவர் விரும்பியிருக்கவில்லையென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.