புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு

Sri Lanka
By Nafeel Apr 27, 2023 02:35 AM GMT
Nafeel

Nafeel

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.

அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவண செய்யுமாறும் கேட்டு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மார்ச் 27ல் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்ச தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.