திருகோணமலை முஸ்லிம் காணியில் புத்தர் சிலை வைக்க பிக்கு முயற்சி! சபையில் இம்ரான் எம்.பி ஆவேசம்
திருகோணமலை-குச்சவெளி முஸ்லிம் காணியில் புத்தர் சிலை வைக்க பிக்கு ஒருவர் முயற்சித்தமை தொடர்பில் இன்று(04.04.2023)திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,“திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள, பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்டுள்ளார்.
அதனை தடுப்பதற்கு பொதுமக்கள் முனைந்த போது அங்கு இனமுறு ஏற்பட்டதாகவும் அங்கு சிலை வைப்பதை தடுக்க முற்பட்ட பொதுமக்களுக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மக்களின் பாரம்பரிய வசிப்பிடம்
தொல்பொருள் திணைக்களத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தல்கள், மக்களின் பாரம்பரிய வசிப்பிடம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படாமலே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளோடு பெளத்த பிக்குகளும் செல்கிறார்கள். அதிகாரிகள் பார்க்கின்ற வேலைகளோடு இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது?”என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கேள்வி நேரத்தில் இந்த சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் நேரடியாக பல கேள்வி எழுப்பினார்.
இது சம்பந்தமாக, தனக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பில்
ஆராய்ந்து விளக்கத்தை தருவதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறியுள்ளார்.