வீதியில் தூங்கிய நபர்மீது ஏறிய வாகனம்..! அதிசயமாக உயிர் தப்பிய நபர்
மட்டக்களப்பில் வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதியில் தும்பாஞ்சோலை பகுதியில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.
தூங்கி கொண்டிருந்த நபர் ஒருவர் மீது வாகனம் ஏறியதில், அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், அருகில் தூங்கிய நபர் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
செங்கலடி பதுளை வீதியில் உள்ள கரடியனாறு தும்பாஞ்சோலை பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் உள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞர் உட்பட இருவர் திங்கட்கிழமை இரவு சென்று அங்கு வீதி ஓரத்தில் தூங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று (17) அதிகாலை 1.30 மணியளவில் வீதியோரத்தில் நித்திரை செய்த இளைஞன் மீது வாகனம் ஏறிச் சென்றுள்ளதுடன், வாகனத்தை ஓட்டிய நபரும் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த இளைஞன் படுகாயம் அடைந்தது சம்பவ இடத்தில் உயிரிழந்ததுள்ளார் எனவும் அருகில் தூங்கியவர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணை
மேலும், இவ்வாறு வீதியில் தூங்கிய இருவரும் மது அருந்திவிட்டு தூங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த இளைஞனின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது, தலையில் வாகனத்தின் டயர் ஏறியதன் காரணத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, குறித்த விபத்துக்கு காரணமான வாகனத்தை செலுத்தி வந்த இளைஞனை தேடும் பணியிலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |