தேர்தெடுக்கப்பட்ட அரசின் மீது முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த விமர்சனங்கள்
இலங்கையின் தற்போதைய ஆட்சிமுறை மற்றும் அரச சேவை குறித்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் சீராக இயங்க வேண்டுமானால் அரசியல் சார்பற்ற, தொழில்முறை மற்றும் நேர்மையான அரச சேவை அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
வலுவிழக்கச் செய்யும்
தற்போது தகுதியான அதிகாரிகளுக்குப் பதிலாக, கட்சி ஆதரவாளர்கள் அரச சேவையில் நியமிக்கப்படுவது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் என அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதி ஒதுக்கிய விவகாரத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சந்திரிகா ஆதரித்துள்ளார்.
சமன் ஏக்கநாயக்க ஒரு நேர்மையான அதிகாரி என்று அவர் குறிப்பிட்டுள்ளார் சட்ட நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கலாக இருக்கக்கூடாது என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி என்ற சொல்லாடல் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்பு
2022-ல் ஏற்பட்ட அரகலய மக்கள் எழுச்சியானது, நாட்டின் ஆட்சிமுறை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்ததன் விளைவே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகால தவறான ஆட்சிமுறையின் விளைவுகளை இலங்கை இன்னும் அனுபவித்து வருகிறது.

எனவே நாட்டின் இந்த வீழ்ச்சியைத் தடுக்கும் இறுதிப் பொறுப்பு மக்களிடமே உள்ளது.
இந்த நிலையில்,குடிமக்கள் அரசாங்கத்தின் முடிவுகளைக் கேள்வி கேட்க வேண்டும் என்றும், சிந்தித்து ஜனநாயக ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.