அவிசாவளை வீதியில் சிறுமி பரிதாப மரணம் - தாயின் கரு கலைந்த சோகம்
ஹட்டன்- அவிசாவளை வீதியில் கித்துல்கல, இங்கிரியாவத்தை எனுமிடத்தில் கடந்த திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விபத்தில் ஐந்து வயதான சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர், கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று மாலை 3.20 மணியளவில் தாய், தந்தை மற்றும் மேற்படி சிறுமி ஆகியோர் ஓட்டோவில் பயணித்து கொண்டிருந்துள்ளனர்.
எதிர்த்திசையில் பயணித்த வான் ஓட்டோவுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஓட்டோவில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த சிறுமி, கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அன்றிரவு 7 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தாய் கர்ப்பிணி என்றும் அவருடைய கருவும் கலைந்துவிட்டதால் அந்தப் பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக அறியமுடிகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.