சம்மாந்துறையில் பள்ளிவாசலில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

Sri Lanka Police Ampara Sri Lanka Police Investigation
By Fathima Apr 08, 2023 06:09 PM GMT
Fathima

Fathima

அம்பாறை - சம்மாந்துறையில் பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற முறுகலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (07.04.2023) மாலை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செந்நெல் கிராமம் - 2 பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றிருந்தது.

நிர்வாக தெரிவு கூட்டம்

சம்மாந்துறை பிரதேச எல்லைக்கு உட்பட்ட பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்காக நிர்வாக தெரிவு கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன், மற்றுமொரு குழுவினர் சில தினங்களில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

 

இதனையடுத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இம்மோதல் சம்பவத்தில் 65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4 பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.