அல் அக்ஸா மசூதிக்குள் தாக்குதல்
லெபனான் மீதும் காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் குழுவான ஹமாஸின் இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேலிய காவல்துறையினர் அத்துமீறி பிரவேசித்து வன்முறை மிக்க சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தெற்கு லெபானினல் இருந்து இஸ்ரேல் நோக்கி எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாத உட்கட்டமைப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
தமது நடவடிக்கை தற்போது இடைநிறுத்தப்படுவதாகவும் மோதல்கள் ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை எனவும் இஸ்ரேல் இராணுவத்தின் பேச்சாளர் கூறியுள்ளார். அமைதியாக இருந்தால் அமைதியாக பதில் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கும் தொனியில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் லெபனானில் இருந்து ஹமாஸ் இயக்கம் தாக்குதலை நடத்துவதற்கு அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பு அனுமதி அளித்திருக்க வேண்டும் என இராணுவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஹமாஸ் இயக்கத் தலைவரின் லெபனானுக்கான விஜயத்தை சுட்டிக்காட்டி இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. எனினும் லெபானில் இருந்து ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்துவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேலின் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
லெபானானில் இருந்து நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் அந்த நாட்டு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. எனினும் லெபான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள், இந்த மோதலுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தை இழுத்துவிடும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் 34 நாட்கள் நீடித்த முரண்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமது நாட்டில் இருந்து எறிகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக லெபனான் இராணுவம் கூறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியர்களின் புனித அல் அக்ஸா மசூதியை இஸ்ரேலிய காவல்துறையினர் தொடர் சோதனைக்கு உட்படுத்தியதை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த மசூதியானது இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக காணப்படுவதுடன், இஸ்ரேல் படையினரின் இந்த சோதனை நடவடிக்கையானது பலஸ்தீனர்களுடனான வன்முறையையும் தூண்டியுள்ளது.
இஸ்ரேல் காவல்துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை, பிராந்திய ரீதியாகவும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.