வாழ்க்கையில் முன்னேற உறுதியான இலட்சியம் தேவை: கவிஞர் அஸ்மின்
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் உறுதியான இலட்சியம் தேவை என பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில் ஒர் இளைஞனின் கதையுடன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் எனும் பெயர் கொண்ட அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அம்மா இறந்துவிடுகிறார்.
மனைவியின் மறைவு தந்த துக்கத்திற்குள் மூழ்கிய அவன் அப்பா, இறுதியில் மதுவிற்குள் மூழ்கிவிடுகிறார். பின், தன் அம்மாவின் அக்கா கவனிப்பில் வளர்க்கப்படுகிறான் தமிழ்ச்செல்வன்.
பெரியம்மா குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாகப் பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்பிற்குமேல் தொடர முடியவில்லை. பின், உள்ளூரில் இருந்த ஒரு டீக்கடைக்கு வேலைக்குச் செல்கிறான். டீ கிளாஸ் கழுவும் வேலை செய்து வந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர்கள் முன் அந்த வேலையைச் செய்வதற்குக் கூச்சமாக இருந்தது.
டீக்கடை இருந்த தெருவில் உறவினர்கள் யாராவது வருவது தெரிந்தால் உடனே ஓடிச்சென்று கடைக்குள் ஒளிந்துகொள்கிறான்.
ஒளிந்து ஒளிந்து வேலை பார்த்த அந்தச் சிறுவன், இதற்கு மேலும் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என 13 வயதில் தீர்மானமாக முடிவெடுத்து சென்னை நோக்கிக் கிளம்புகிறான்.
கூலிக்கு மூட்டை தூக்கிப் பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அந்தச் சிறுவனை 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பிரியாணி ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் உரிமையாளராக்கி அழகு பார்த்தது சென்னை.
நம்பிக்கை கலந்த கடின உழைப்பு
வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று சொந்த ஊரிலிருந்து வெளியேறி வந்த தமிழ்ச்செல்வனுக்கு சரியான களம் ஏற்படுத்திக்கொடுத்தது சென்னையாக இருந்தாலும் அந்தக் களம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை.
பல ஆண்டுகால போராட்டம்... நம்பிக்கை கலந்த கடின உழைப்பு... பல வலிகள் ஆகியவற்றிற்குப் பிறகே இந்த வெற்றி தமிழ்ச்செல்வனுக்கு வசப்பட்டது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான இலட்சியமும், ஆயிரம் தடைகள் வந்தாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு அந்த லட்சியத்தை நோக்கிப் பயணிப்பதற்கான உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எவரும் வெற்றிபெறலாம் என்பதற்குத் தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை உதாரணம். (நன்றி நக்கீரன்)
சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் தலைவர், உழைப்பால் உயர்ந்த மனிதர், அண்ணன் தமிழ்செல்வன் அவர்களின் அன்பில் நெகிழ்ந்த தருணம்.