நேற்றிரவு மஸ்ஜித்ற்குள் நான் கண்ட ஓர் அழகிய காட்சி

Colombo
By Fathima Mar 25, 2023 10:42 AM GMT
Fathima

Fathima

தறாவீஹ் தொழுகைக்காக நேற்றிரவு காங்கேயனோடை பெரிய பள்ளிவாயலுக்கு சென்றிருந்தேன். இரண்டு பக்க விறாந்தை கதவுகளையும் திறந்துவிட்டால் சல சல வென்ற குளிர் காற்று எந்த நேரமும் பள்ளி வளாகத்தை வட்டமடிக்கும்.

அழ்ழாஹ்வின் அருட்கொடைகளில் நின்றும் உள்ளவை. கணீரென்ற குரலில் மெல்லிய கிராஅத்துடன் (Mic இரைச்சல் இன்றி) நீண்ட ரக்அத்களாக தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

நான்கு ரக்அத்கள் முடிந்ததும் ஹஷரத் எழுந்து சிறிய மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார். ரமழானின் பெருமை பற்றியும், ரமழானில் நபித் தோழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் உரை நிகழ்ந்தது.

எனக்குப் பின்னால் பெரிய மாணவர் பட்டாளம். கூட்டமாக அமர்ந்து கொண்டு உன்னிப்பாக பயானை அவதானித்து கொண்டிருந்தார்கள். வியப்பாக இருந்தது. யாரும் யாருடனும் பேசவும் இல்லை.

எழுந்து போகவும் இல்லை. பயான் நிறைவுற்றதும் ஆசிரியர் ஒருவர் எழுந்து நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவிலிருந்து நான்கு கேள்விகளை மாணவர்களை நோக்கி கேட்டார்கள். அவர்களும் பதில் எழுத Paper + pen உடன் தயாராகவே வந்திருந்தார்கள்.

இடைநடுவே தேனீர் உபசாரமும் ஆரவாரம் இன்றி நடைபெற்றது. கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்கள் பள்ளிவாயல் மிம்பர் அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்டியினுள் தங்களது பெயர் எழுதிய காகிதத்தை நன்கு மடித்துவிட்டு ஒவ்வொருவராக சென்று போட்டுவிட்டு அமர்ந்து தேனீரை பருக துவங்கினர். இவ் அழகிய காட்சியை அதிகமான மூத்த சகோதரர்கள் பின் வரிசையில் அமர்ந்தபடி ஆர்வமாய் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

மனதிற்கு மிகவும் ஆறுதல் தரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. தொழுகை முடிந்ததும் ஆசிரியர் நண்பரிடம் இது பற்றி வினவினேன். முதல் பத்து நோன்பில் மட்டுமே கேள்வி பதில் நிகழ்வுகள் எனவும் இரண்டாம், மூன்றாம் பத்தில் குர்ஆன் திலாவத் , ஸஹாபா தோழர்களின் வரலாறு, அழகிய கிராத் மற்றும் அஃதான் கூறும் போட்டி என இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாக தொடரவிருப்பதாக கூறினார்.

அழகிய குரலில் அஃதான் கூறும் மாணவருக்கு நோன்பு 27ஆம் தினத்தன்று பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் அஃதான் சொல்ல வாய்ப்பை வழங்கி அவரை கெளரவிக்க இருப்பதாகவும் கூறினார்.

பரிசுகள் பெரிய அளவில் இல்லை இரண்டொரு ஆசிரியர்களின் பங்களிப்புடன் நூறு / இருநூறு ரூபாய் அல்லது அப்பியாச கொப்பி ஒன்றையேனும் வழங்கும் முயற்சியில் இருப்பதாக கூறினார். மாணவர்களை பள்ளிவாயலுடன் தொடர்பில் வைத்துக்கொள்ள அந்த பள்ளிவாயல் நிர்வாகமும் ஆசிரியர்களும் எடுத்துக்கொண்ட முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது. இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் பள்ளிவாயல்களினது பங்களிப்பு அவசியமானதொன்று என்பதை இந் நிகழ்வு அழுத்தமாக கூறி நிற்கின்றது.

வணக்கசாலியைவிட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர்’ எனற நபிமொழி நினைவில் வந்துபோனது எனக்கு. இப்பள்ளிவாயலின் நிர்வாகத்தை உற்றுநோக்கினால்,.. பள்ளி தலைவர் என்பவர் பல்கலைக்கழக விரிவுரையாளர், செயலாளர் ஒரு ஆசிரியர், பொருளாலர் ஒரு அதிபர் எனவும் நிர்வாகத்திலும் ஒரு அதிபர் நான்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்கள், இரண்டு உலமாக்களும் அடங்குவர்.

எடுத்துக்காட்டான சிறந்ததொரு நிர்வாகத்தை இவர்கள் செயற்படுத்திவருவதோடு நின்றுவிடாமல் கற்றறிந்த இளைஞர் சமுதாயத்தை கொண்டு அடுத்த தலைமுறையினரையும் வளப்படுத்தி உருவாக்கிவிடும் எண்ணத்தோடு கல்விக்கான தனியானதொரு குழுவும் இந்த பள்ளிவாயல் நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் குழுவின் நேரடி கண்காணிப்பில் அது இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தனைக்கும் இவர்களை பின்னாலிருந்து வழி நடாத்துவது அவ்வூர் மூத்த பிரஜைகளும் அதீத அனுபவங்களை கொண்ட முன்னாள் நிர்வாக உறுப்பினர்களாக இருந்த சகோதரர்களுமே.

நேற்றிரவு மஸ்ஜித்ற்குள் நான் கண்ட ஓர் அழகிய காட்சி | A Beautiful Sight I Saw Inside The Masjid

நீங்கள் தலைவர்களாக மாறுவதற்கு முன்னர் நல்ல அறிவை கற்றுக்கொள்ளுங்கள்’ என உமர் (ரழி) அடிக்கடி அறிவுறுத்துவார்களாம் தோழர்களுக்கு.

நன்கு கற்றறிந்த புத்திஜீவிகளிடம் ஒரு பள்ளிவயலின் நிர்வாகத்தை ஒப்படைத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இவர்களது நிர்வாகமே நல்ல உதாரணம். கல்வி ஞானம் இல்லாமல் தன் மனோ இச்சைப்படி நடப்பவர்கள் அநியாயக்காரர்கள்’ என்று அல்குர்ஆன் கூறுகிறது. (30:29)