இலங்கையில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி நேற்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
டெங்கு அதியுயர் வலயங்கள்
டெங்கு வேகமாக பரவிவருவதால் இவ்வருடம் இதுவரை பதினைந்து டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த நான்கு மாதங்களில், நாட்டில் இருபத்தி எட்டாயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவருவதுடன், இந்நிலைமையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நாற்பத்திரண்டு டெங்கு அதியுயர் வலயங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு மாநகர சபை தவிர்ந்த கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பதினெட்டு சுகாதார பிரிவுகளிலும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது