“தண்ணீர்” என நினைத்து இரசாயன திரவத்தை அருந்திய சிறுமி உயிரிழப்பு!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் பெரோக்சைட் (Hydrogen Peroxide) இரசாயனத்தை பருகியதில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை (24.08.2026) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தினர் வீட்டின் முன்றலில் இருந்தபோது தாகம் ஏற்பட்ட சிறுமி, ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து பருகியுள்ளார்.
ஹைட்ரஜன் பெரோக்சைட்
உடனடியாக சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குறித்த இரசாயனத்தை தண்ணீர் என நினைத்து பருகியதாலேயே சிறுமி உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.