இளைஞனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்த பொலிஸார்.. உயர்நீதிமன்று வழங்கிய தீர்ப்பு
கடந்த 2012ஆம் ஆண்டு தம்புத்தேகம பொலிஸாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனின் வழக்கில் தம்புத்தேகம பொலிஸின் ஆறு முன்னாள் அதிகாரிகள், தங்கள் சொந்த நிதியிலிருந்து 1.2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பானது, 1994ஆம் ஆண்டு 22ஆம் இலக்க கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைச் சட்டத்தின் கீழ் நேற்று (23.05.2025) வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்ட மா அதிபருக்கு உத்தரவு
தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த சுசில் பிரியங்க செனவிரத்ன என்ற இளைஞன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த பின்னர், நீதியரசர்களான துரை ராஜா மற்றும் யசந்த கோடகொட ஆகியோரின் ஒப்புதலுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். பிரியந்த பெர்னாண்டோ இந்த தீர்ப்பை அறிவித்தார்.
அதன்படி, மனித உரிமை மீறல்களுக்காக தண்டிக்கப்பட்ட தம்புத்தேகம பொலிஸின் முன்னாள் அதிகாரி பிரசன்ன கருணாஜீவ, எம்.டி. ஜகத் பாலா, எம்.ஜி.டி.பி. அபேசிங்க, உபாலி ஹேரத் மற்றும் பி.கே. பிரேமதுங்க ஆகியோர் மனுதாரருக்கு தலா ரூ. 200,000 செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
2012 - ஓகஸ்ட் 2ஆம் திகதி அன்று தம்புத்தேகம பொலிஸாருக்கு எதிரான போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றதன் அடிப்படையில் குறித்த 6 பொலிஸாரும் இளைஞரைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அடித்து, மனிதாபிமானமற்ற ரீதியில் சித்திரவதைக்கு உட்படுத்தியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடூரமான தாக்குதல்
அதேவேளை, குறித்த இளைஞன் போராட்ட பேரணியில் பங்கேற்கவில்லை என்றும், அந்த நேரத்தில் அவர் தனது வர்த்தக நிலையத்தில் இருந்தார் என்றும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பொலிஸார் காவலில் இருந்தபோது, குறித்த 6 அதிகாரிகளும் மோட்டார் சைக்கிளின் தலைக்கவசத்தால் இளைஞரின் தலை மற்றும் காதில் தாக்கியதால், அவரது காதுகளில் இரத்தம் கசிந்து, காதுப்பக்கம் வெடித்ததாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அவரது இடது காதில் கேட்கும் திறனை நிரந்தரமாக இழந்துவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதுடன், மனுதாரருக்கு உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
தாக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் அதிகாரிகள், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பில் இறுதி முடிவாக குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |