சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள் : கொலை செய்த காவல்துறையினரை கைது செய்யுங்கள் ...!
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனை கொலை செய்த காவல்துறையினரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் உறவுகள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) - அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டுக்கோட்டை வடக்கு, சித்தங்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "காவல்துறையினரை கைது செய்“, “எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்“, “காவல்துறையினரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





