இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157ஆவது ஆண்டு நிறைவு: கல்முனையில் பிரார்த்தனை (Photos)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157ஆவது ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.
இதனடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகள் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனையில் மும்முரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வினை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் முன்னெடுத்துள்ளார்.
துஆ பிரார்த்தனை
இதன்படி 157ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல் ஒன்று இன்று (27.08.2023) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி மாலை 4 மணியளவில் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உதவி பொலிஸ் பரிசோதகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


