இந்தியாவின் 121 மில்லியன் டொலர்களை திருப்பி செலுத்திய இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியின் முதல் தவணையிலிருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியக் கடன் வரியின் முதல் தவணையை மீளச் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி நேற்றைய தினம் பணம் மீளச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலரை கடனாக வழங்க முன்வந்துள்ளது.
இதற்கான உடன்படிக்கைகள் நிறைவுபெற்றதை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புப் பொதியின் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அண்மையில் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.