எல்-நினோ வெப்ப அலை குறித்து பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
எல்-நினோ காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில், மதுபானம் மற்றும் செயற்கை இனிப்புச் சுவை கொண்ட குளிர்பானங்களை அருந்துவது உடலுக்கு மிகுந்த ஆபத்தானது என சுகாதார அமைச்சின் தொழிலும் சுகாதார அலகு எச்சரித்துள்ளது.
இது வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு மரணத்தில் முடியக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சூழலின் வெப்பநிலை மிக உயர் மட்டத்தை எட்டியுள்ளதாகவும், மதுபானம் அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறைந்து பல்வேறு தீவிர உடலாரோக்கிய சிக்கல்கள் ஏற்படும் என சமூக மருத்துவ நிபுணர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்க சுத்தமான குடிநீர், இளநீர் மற்றும் தர்பூசணி போன்ற இயற்கை உணவுகளை அதிகளவில் உட்கொள்வது மிகவும் சிறந்தது என அறிவிவுறுத்தியுள்ளார்.
சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரையிலான காலத்தில் நேரடி வெயிலில் செல்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
குறிப்பாக சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்களது மருந்துகளை உரிய நேரத்தில் உட்கொண்டு, உடலை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்ப பக்கவாத பாதிப்பு மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சமூக மருத்துவ நிபுணர் இனோகா சுரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.