பாடசாலை முன் பாதுகாப்பற்ற வீதி! விசனம் வெளியிட்ட பெற்றோர்
கந்தளாயின் பாடசாலை ஒன்றின் முன்னால் உள்ள வீதி பாதுகாப்பற்றதாக காணப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த பாடசாலையில் கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவிகளும், 38 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வி மற்றும் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள சிக்கல்
பாடசாலை முடியும் வேளைகளில், குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு இல்லாத நாட்களில் பாதுகாப்பற்ற முறையில் வீதியை கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது.
அதேவேளை, இவ்வாறு பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்களை அழைத்து செல்ல பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், போன்ற வாகனங்களில் வருகை தருவதால் பாடசாலைக்கு முன்னால் நெரிசலை உருவாக்குகின்றார்கள்.
இதனால் மாணவிகள் வீதியை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக ஆசிரியர்கள் பெரும் மனஅழுத்தத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
“பாதுகாப்பின்றி மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப முடியாத நிலைமை உள்ளது. இது தொடர்ந்து நீடித்தால் பெரும் உயிரிழப்பு நேரிடக்கூடும்,” என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையை மாற்ற பொலிஸார், கல்வி அதிகாரிகள் மற்றும் நகரசபை உடனடியாக கவனம் செலுத்தி, சீரான போக்குவரத்து ஒழுங்கை நிலைநிறுத்த தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




