திருகோணமலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தவிசாளர் தெரிவு இடம்பெறும் திகதிகள் அறிவிப்பு
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளுக்கான தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெறும் திகதி மற்றும் நேரம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், ஜூன் மாதம் 17ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிண்ணியா நகர சபைக்கும், மாலை 2.00 மணிக்கு கிண்ணியா பிரதேச சபைக்கும் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கந்தளாய் பிரதேச சபைக்கும், மாலை 2.00 மணிக்கு தம்பலகாமம் பிரதேச சபைக்கும் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது.
பதவி பிரமாணம்
ஜூன் மாதம் 20ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு சேருவில பிரதேச சபைக்கும், ஜூன் மாதம் 23ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மூதூர் பிரதேச சபைக்கும், மாலை 2.00 மணிக்கு திருகோணமலை மாநகர சபைக்குமான தெரிவு இடம்பெற உள்ளது.
ஜூன் மாதம் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குச்சவெளி பிரதேச சபைக்கும், மாலை 2.00 மணிக்கு பட்டிணமும் சூழலும் பிரதேச சபைக்கும் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோமரங்கடவல பிரதேச சபை, பதவிஸ்ரீபுர பிரதேச சபை, மொரவெவ பிரதேச சபை ஆகிய 3 உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தியும், வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியும் தனித்து பெரும்பான்மையை பெற்றுள்ளபடியால், இந்த சபைகளில், தவிசாளர்கள் மற்றும் உதவி தவிசாளர்கள் ஏற்கனவே பதவி பிரமாணம் செய்துள்ளனர்.
பதவி நியமனம்
ஏனைய 9 உள்ளூராட்சி மன்றங்களிளும், எந்த ஒரு கட்சியும் 50 வீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக, எந்த ஒரு கட்சியாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை, அங்கு ஏற்பட்டிருக்கின்றது.
இதில், குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கடந்த மே மாதம் 27 திகதி திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவருமான சன்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எஸ்.தௌபீக் ஆகியோருக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயற்படுவர்.
ஒப்பந்தம்
குச்சவெளி பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவிசாளராகவும் செயல்படுவர்.
மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை தமிழரசி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவசாளராகவும் செயற்படுவர்.
மூதூர் பிரதேச சபையில், அதற்கு அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சபை உறுப்பினர் ஒருவர் தவுசாளராகவும், இலங்கை தமிழரசி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதி தவசாளராகவும் செயற்படுவர் எனவும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாநகராட்சி மன்றம், திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலாகமம் பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகிய ஆறு உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் ஆகியோரை நியமிப்பதில், பல்வேறு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், குறித்த நாட்களில் இந்த மன்றங்களுக்களில் தவிசாளர்களை நியமிப்பதில் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக எதனையும் தற்போது உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |