நான் உண்ண மாட்டேன்.. வைத்தியசாலையிலும் அடம்பிடிக்கும் சுரேஷ் சலே
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்ந்தும் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது கோரிக்கைகளுக்காக வைத்தியசாலையிலும் தொடர்ந்து உணவு உண்பதை பிடிவாதமாக தவிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் உண்ணாவிரதம்..
வைத்தியசாலையில் சுரேஷ் சலேயை சந்திப்பதற்கு அவருடைய உறவினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் நேற்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, சுரேஷ் சலே தான் உணவுத் தவிர்ப்பில் தொடர்ந்தும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளிலிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை நீக்குமாறும், தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறும் கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சலேவுக்கு சேலைன் ஏற்றப்பட்டிருந்தாலும், அவர் உண்ணவோ அல்லது நீர் அருந்தவோ தொடர்ந்து மறுப்பு வெளியிட்டதாக வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவருடைய மனைவி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.