கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொடரும் மாணவர்களின் போராட்டம்!
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் 4 பேர் மயக்கமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் நேற்று (09) அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த கற்கை நிறுவகத்தில் நான்காம் வருடம் முதலாம் அரையாண்டில் (2019Æ2020) நடன நாடகத்துறையல் கல்வி கற்று வருகின்றனர்.
தொடர் போராட்டம்
"இதன் விரிவுரையாளர் ஒழுங்கு முறையாக இரண்டு வகுப்புக்களும் நடைபெறுவதில்லை. மட்டுமல்லாது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன் சில மாணவர்களின் உடலமைப்பை வைத்து கேலி செய்து அவமானப்படுத்துவதுடன் விரிவுரை நேரங்களில் மாணவர்களை சரியான காரணமின்றி வெளியேற்றி விடுகிறார்.

இவ்வாறு விரிவுரையாளர் பல நடவடிக்கைகளால் மாணவர்கள் ஆகிய நாங்கள் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இவரை மாற்றிதருமாறு கோரி கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடியிடம் (04.03.2025) எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை கையளித்து முறையிட்டோம். அவர் அதற்கான இரு வாரங்களில் தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்தார்.
இருந்தபோதும் எமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அது தொடர்பாக (12.08.2025) அன்று பணிப்பாளரிடம் மீண்டும் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் எமது பிரச்சினையை முன்வைத்திருந்தோம்.
அதற்கான தீர்வு கிடைக்காமையினால் மாணவர் ஒன்றியத்தினூடாகவும் கோரிக்கையினை பணிப்பாளர் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கான நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை.
எனவே, குறித்த பாடத்துக்கான பரீட்சகரை நியமிக்க வேண்டாம் என கோரி கடந்த புதன்கிழமை (07ஆம் திகதி முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்திருந்து அமைதியான போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து இரவு பகலாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது இதுவரை 4 பேர் மயக்கமடைந்து நிலையிலும் 4 மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொட்டும் மழை குளிர்காற்றுக்கு மத்தியில் காரியாலய கட்டிட வெளிபகுதியில் தொடர் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

