இலங்கையில் விபத்துக்குள்ளாகும் பகுதிகள் குறித்து வெளியான அறிவிப்பு
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாத, விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவற்றில் 722 இடங்கள் வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடிய இடங்களாகும் என பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள பிரதான வீதிகளில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய 340 இடங்கள் காணப்படுகின்றன. இதில் 329 இடங்கள் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
அதிகரிக்கும் விபத்துகள்
மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லைக்குட்பட்ட 156 இடங்கள் விபத்துக்கள் ஏற்படக் கூடிய இடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 150 இடங்கள் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளுராட்சி அமைப்புகளின் எல்லைக்குட்பட்ட 277 இடங்கள் உள்ளன, அதில் 243 இடங்கள் விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்கள் என பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளை விரைவில் பாதுகாப்பானதாக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஒரே இடத்தில் விபத்துக்கள் இடம்பெற்றால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அல்லது உள்ளுராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பற்ற இடங்களை அடையாளம் காணும் பொறுப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பாகும் என்பதால், இரு அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |