இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின் கொள்ளளவு தற்போது இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்தி
லக்விஜய மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதுடன், அதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்கு இணைக்கப்படுகிறது.

இதன்படி, வழமையான பராமரிப்பு பணி காரணமாக கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஒரு இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மற்றுமொரு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்ய வேண்டியேற்பட்டதாக மின்சார சபை சுட்டிக்காட்டியது.
தற்போது அந்த இரண்டு இயந்திரங்களினதும் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் வாரத்திற்குள் அவற்றை மீண்டும் மின் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் அன்றாட மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.