உயர் பதவிக்காக போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பிப்பு..! விசாரணை ஆரம்பம்
கல்வி தொடர்பான தேசிய நிறுவனமொன்றில் உயர் பதவிக்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கூறப்படும் அதிகாரி தொடர்பில் கணக்காய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அவரது கல்வித் தகுதி தொடர்பாக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் தணிக்கைத்துறை இந்த விசாரணையைத் ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த உயர் அதிகாரி சமர்ப்பித்த வணிக நிர்வாகம் தொடர்பான முதுகலை சான்றிதழ் குறித்து, தணிக்கை நிறுவனம் சான்றிதழை வழங்கியதாக கூறப்படும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திடம் விசாரித்ததில், இதுவரை எவ்வித தகவலும் உறுதிப்படுத்தவில்லை என தெரியவருகிறது.
ஊழல் குற்றச்சாட்டு
மேலும், குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி பூர்த்தி செய்த பணி அனுபவம் குறித்து, அவர் முன்பு பணியாற்றிய அமைப்பு ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட இரண்டு சேவை சான்றிதழ்களில், மாறுபட்ட தரவுகள் காணப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த அதிகாரி பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய போது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சேவையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.