சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்தும் பொறுப்பை எம்மிடம் ஒப்படையுங்கள்: ரவிகரன் எம்.பி சவால்
கடற்படை மற்றும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்பினரால் முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் அந்தப் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைவாக, துரைராசா ரவிகரன் நேற்று(15.09.2025) இரவு கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாக கண்காணித்ததுடன், சட்டவிரோத கடற்றொழில் இடம்பெறுவது தொடர்பான ஆதாரங்களையும் திரட்டியிருந்தார்.
இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த துரைராசா ரவிகரன்,
“முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடலிற்கு நேரடியாகச்சென்று சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் திருட்டுக்கும்பல்களை நேரடியாக கண்காணிக்க முடிந்துள்ளது.
சட்டவிரோத கடற்றொழில்
இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கொள்ளையர்கள் மீது கடற்படையோ, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களமோ, பொலிஸாரோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.
இந்த விடயத்தில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்தி சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால், முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களமும், கடற்படையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.
காணி அபகரிப்பு
குறிப்பாக கடற்படை என்றால் கடலில் தமது கண்காணிப்புக்களைச் செலுத்தி, கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் அக்கறையை காட்டுகின்ற கடற்படையினர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை.
இவ்வாறு உரிய தரப்பினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேலும் வலுப்பெற்றுவருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.