ஏறாவூரில் ஆயுதங்களை தேடிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்!
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி தனியார் காணி ஒன்றில் ஆயுதங்களை தேடி, நிலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை இன்று சனிக்கிழமை (10) பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த நிலையில் எந்த பொருட்களையும் மீட்கப்படவில்லை என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதங்கள்
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைவிடப்பட்டுள்ள தனியார் காணியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை தோண்டி சோதனை செய்வதற்காக ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் அனுமதியை பெற்றனர்.

இதனையடுத்து குறித்த காணியில் அடையாளமிடப்பட்ட நிலத்தை இன்று காலை 9.00 மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் கிராம உத்தியோகத்தர் உட்பட தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் பைக்கோ இயந்திரம் கொண்டு பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் எந்த விதமான ஆயுதங்களோ பொருட்களோ மீட்கப்படாததையடுத்து தோண்டிய குழியை மண்ணால் மீண்டும் மூடியுள்ளனர்.