திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த பொருள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் செல்வதற்குத் தடை
கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த உலோகப் பாகம், நீரோட்டத்தின் காரணமாக நேற்று (28.12.2025) மாலை சம்பூர் கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த கடற்றொழிலாளர்கள் உடனடியாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
தற்போது கரை ஒதுங்கியுள்ள பாகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்படை வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்த ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அருகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மர்மப் பொருள்
பொதுவாக ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும்போது, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்வதற்காகப் பல்வேறு நிலைகளில் அதன் பாகங்கள் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் 'ஹீட் ஷீல்ட்' (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதியே இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் ரொக்கட்டுகளின் சிதைவுகள் அவ்வப்போது இலங்கை மற்றும் மாலைதீவு கடற்பரப்புகளில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


