முஸ்லிம் பெண் பிரதிநிதிக்கு கிடைத்துள்ள ஆதரவு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற நியமன உறுப்பினர்களுக்காக நியமிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதான விசேட வர்த்தமானி அறிவித்தல் 31ஆம் திகதி வெளியாகி இருந்தது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில், வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலின் பிரகாரம், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்ற மூன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவ உறுப்பினர் நியமனங்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து பெண் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்த றிபைன் பாத்திமா றிஸ்லா மாநகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதிநிதி தெரிவு
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாநகரசபை உறுப்பினர் றிஸ்லாவுக்கு யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன, றிஸ்லாவுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி முஸ்லிம் பெண் மாநகரசபை பிரதிநிதித்துவமே, யாழ். முஸ்லிம் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அரசியல் ஆளுமையாக அடையாளம் காட்டியிருப்பதுடன், முதல் பெண் மாநகரசபை உறுப்புரிமையினையும் அடையாளம் காட்டியுள்ளது.
இது வரலாற்றில் பதியப்படும் சந்தர்ப்பமாகும். இந்த வரலாற்றை உருவாக்கியிருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கட்சியின் மீதான நம்பிக்கை
முஸ்லிம் பெண் மாநகர சபை உறுப்புரிமையை வழங்கியிருக்கும் கட்சியின் தீர்மானமானது, இலங்கையின் வெளி மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ். முஸ்லிம்களின் தொடர்ச்சியான திடமான அரசியல் பயணத்திற்கும், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இருப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுக்கும் தமிழ் அரசுக் கட்சி ஊடான மாநகரசபை பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் பங்களிப்பைச் செய்யும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாகவும், நம்பிக்கையாகவும் காணப்படுகின்றது.
இம்முறை யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முஸ்லிம் பெண் உறுப்பினர் நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |