முஸ்லிம் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக தகனம்! இம்ரான் மஹரூப் முன்வைத்துள்ள பிரேரணை
ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கோவிட் -19 பெருந்தொற்று பரவல் காலப்பகுதியில் ஒருதலைபட்சமாகவும், வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு அவர் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.
தனிநபர் பிரேரணை
கோவிட் பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு முரணாக ஒருதலைப்பட்சமாகவும், வலுக்கட்டாயமாகவும் தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களின் எண்ணிக்கை, அவ்வாறு தகனம் செய்யப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் போன்ற தகவல்களை விசாரிப்பதற்கும் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்.

இறந்தவர்களின் ஜனாஸாக்களை இவ்வாறு வலுக்கட்டாயமாகத் தகனம் செய்தமைக்கு ஏதுவான பின்னணி மற்றும் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் உளநிலை தொடர்பான விசாரணை செய்வதற்கும், இதற்கு உடந்தையாக இருந்து வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்று தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.