மின்சார கம்பிகளை திருட முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு (Batticaloa) திருப்பெரும்துறை வீதியிலுள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில் முன்னாள் அமைந்துள்ள அதிஉயர் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் கட்டிடப்பகுதியில் உள்நுழைந்து மின்சார கம்பிகளை திருட முற்பட்ட திருடன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (06) காலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு.தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேலும், குறித்த பகுதியில் மின்சார சபையினால் அதிஉயர்வான 3300 சக்தி மின்சாரத்தை சீராக்கி கட்டுப்படுத்தி பாவனையாளர்களுக்கு அனுப்பும் கட்டிட பகுதியில் சம்பவ தினமான இன்று காலையில் மின்சாரசபை உத்தியோகத்தர்கள் சென்ற நிலையில் அங்கு மின்சாரம் தாக்கி கீழே வீழந்து படுகாயங்களுடன் இளைஞன் ஒருவர் கிடப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயங்களுடன் இருந்த இளைஞனை மீட்டு, மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்ததுடன், வெட்டப்பட்ட மின்சார கம்பிகள் மற்றும் வெட்டுவதற்கான ஆயுதங்கள், துவிச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மட்டு.தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





