ஏறாவூரில் பழங்களைத் திருடிய நபர் கைது
ஏறாவூரில் மாதுளம் பழங்களைத் திருடிய நபரொருவர் அதனை விற்பனை செய்ய ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் இன்றைய தினம் (29) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு சம்பவங்கள்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூரிலுள்ள பழவகைக் கடையொன்றில் மாதுளம் பழங்களை பெட்டியுடன் சூசகமாக திருடிய நிலையில், ஓட்டமாவடியிலுள்ள பழவகைக் கடை ஒன்றில் விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இந்நிலையில், ஓட்டமாவடியைச் சேர்ந்த பழவகைக் கடை உரிமையாளர் ஒருவர் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டதால் பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, குறித்த கைது செய்த சந்தேக நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |