சகல அரசியல் கட்சிகளுக்கும் மைத்திரி விடுத்துள்ள பகிரங்க அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் ஒன்றிணைய வேண்டும் என சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (07.02.2024) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசு
இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,"பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை 2022ஆம் ஆண்டு முதல் வலியுறுத்துகின்றோம்.
சர்வகட்சி அரசை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உண்மைத்தன்மையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து நாட்டின் பொருளாதார நிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பகிரங்க அழைப்பு
இதன் காரணமாக, சமூகக் கட்டமைப்பு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூகக் கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு எம்மால் எதனையும் சாதிக்க முடியாது.
எனவே, நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அது மட்டுமன்றி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் எம்மிடமே உள்ளன.
ஆகையால் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுகின்றேன்.” என சுட்டிக்காட்டியுள்ளார்.