போர்வீரர் நிகழ்வில் மகிந்தவுக்கு விடுக்கப்படாத அழைப்பு! அரசாங்கத்தின் நிலைப்பாடு
சிறிலங்கா இராணுவத்தின் 17ஆவது ஆண்டு போர் வீரர்களின் நினைவு நிகழ்வுக்கு அரசியல் களத்தைச் சேர்ந்த எவரும் அழைக்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், போரில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர சிங்களர், தமிழர் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நிகழ்வில் ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான பிரதி அமைச்சர் ஆகியோர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், முப்படைகளும் காவல்துறையும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், எந்தவொரு அரசியல் அமைப்பிற்கும் அல்லது அரசியல் தலைவர்களுக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு. ஜனாதிபதி மற்றும் தொடர்புடைய அமைச்சர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்” என பதில் வழங்கியுள்ளார்.
