புத்தர் சிலைகள் முளைப்பது புதிதல்ல
வடகிழக்கில் அதிகமாக தமிழ், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மை மக்களே வாழ்கின்றனர்.
ஒவ்வொரு மதமும் தங்களுடைய பகுதிகளுக்குள் மதஸ் தளங்களை அமைத்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான மதச் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும், தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக பௌத்த துறவிகள் அடாத்தாக மக்கள் காணிகளை கையகப்படுத்துவதை ஏற்க முடியாதுள்ளது.
குறிப்பாக புனித பூமி என்ற போர்வையிலும் தொல் பொருள் பகுதி என்ற போர்வையிலும் அப்பாவி மக்களின் காணிகளை அபகரிக்கின்றனர்.
அடாவடித்தனம்
இவ்வாறான நடவடிக்கைகளை ஆட்சி அதிகாரங்களுக்கு வருகின்ற எந்த ஒரு அரசாங்கமும் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அநுர அரசாங்கம் கூட இதனை பொருட்படுத்த முடியாமல் உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல தமிழர் தாயகத்தில் பெரும்பான்மை சமூகம் இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகளை வைத்தும் விகாரைகளை அமைக்கவும் முயற்சித்து வருகின்றனர்
சில பகுதிகளில் பல தடைகளை தாண்டியும் கட்டுமான பணிகளை முடிவுறுத்தியுள்ளனர்.
அரச மரங்கள் காணப்படும் பல இடங்டளில் புத்தர் சிலைகளை நிறுவியுள்ளனர். இவ்வாறாக அநேக புத்தர் சிலைகளானது தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் இடங்களில் தற்போது வரை இருப்பதை காணமுடிகிறது.
எடுத்து காட்டாக மூதூரில் 64ம் கட்டை மலை, நிலாவெளி பெரிய குளம் மூன்றாம் கட்டை பகுதி, திரியாய் அரிசி மலை உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான நிலை காணப்படுகிறது
இது போன்ற சிலை விவகாரமானது கோயில் பகுதி உள்ள இடத்தில் வைத்து தங்களது மத ஆனுஷ்டானங்களை பௌத்த பிக்குகள் முன்னெடுப்பதால் இன முறுகலையும் கடந்த காலங்களில் சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
வனத்துறையின் செயல்
எடுத்து காட்டாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் சம்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 40 விவசாயிகளுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தையும், கிளிவெட்டி கிராமசேவகர் பிரிவில் 37 விவசாயிகளுக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலத்தையும், பாரதிபுரம் கிராமசேவகர் பிரிவில் 45 விவசாயிகளுக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தையும், ஆசாத்நகர் கிராமசேவகர் பிரிவில் 70 விவசாயிகளுக்கு சொந்தமான 148 ஏக்கர் நிலத்தையும், தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவில் 60 விவசாயிகளுக்கு சொந்தமான 93 ஏக்கர் நிலத்தையும் என ஆக மொத்தம் 252 விவசாயிகளுக்கு சொந்தமான 693 ஏக்கர் நிலத்தை வனத்துறையானது தனது எல்லைக் கற்களை இட்டு பிடித்து வருவதோடு விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் வருகின்றது.
இது தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில் காணப்படுவதும் ஜீவனாம்சத்தை அழிக்கும் செயலாக காணப்படுகிறது.
அதேபோன்று திருகோணமலை மாவட்டதில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 29,430 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ளது.
மேலும், 28,372 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முனைகிறது. வனவிலங்குத் துறை 7,330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. தொல்பொருள் துறை 1,087 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. புத்த பிக்குகள் பூஜா பூமி என்ற பெயரில் 3,820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர்.
இதன் மூலம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 70,039 ஏக்கர் நிலம் நெல் உற்பத்தி செய்யாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு போகத்தில் 140,000 மெற்றிக் தொன் நெல் உற்பத்தி குறைக்கப்படுகின்றது.
மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களது ஆட்சிக்காலத்தின் பொழுது 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நெற் செய்கைக்குப் பயன்படுத்திய நிலங்களை நெற்செய்கைக்கு விடுவிக்கும்படி அரச ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
காணிகள் அபகரிப்பு
எனினும் இது வரையில் குறித்த ஆணை முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்திலே 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் விவசாயம் செய்த 118,710 ஏக்கர் நிலத்தை வனத்துறையினரும் 111,619 ஏக்கர் நிலத்தை வன விலங்குத் துறையினரும் 2,599 ஏக்கர் நிலத்தை தொல் பொருள் துறையினரும் பூஜா பூமி, பூஜாக் கொடை என்னும் பெயர்களில் ஏறத்தாழ 3,820 ஏக்கர் நிலத்தை புத்த பிக்குமாரும் ஆக மொத்தம் மக்கள் விவசாயம் செய்த 236,748 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் ஒரு போகத்தில் மட்டும் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமல் போகின்றது.
ஒட்டுமொத்தமாக பூஜா பூமி என்ற போர்வையில் மக்கள் காணிகள் அபகரிப்பு செய்யப்பட்டே வருகிறது. இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது கடந்த 26ஆம் திகதி அன்று திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இருந்த போதிலும் நேரடி கண்காணிப்பு விஜயங்களை புனித பூமிக்கு சென்று ஆராய முடியாமல் இது போன்ற உள்ளக கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர் ஆனால் தீர்வு எட்டப்படுவதாக தெரியவில்லை .
முளைக்கும் புத்தர்சிலை
மேலும் தற்போதைய சூழ் நிலையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தமலையில் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப்புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனர். கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அமைச்சர்கள் முதல் ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதே சூழலில் உள்ள மற்றொரு மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மூதூர் 64ஆம் கட்டையில் நிறுவப்பட்ட புத்தர் சிலையானது 200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமிருந்த மேற்படி சூழலை தொல்லியல் நிலமாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருந்தது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தொல்லியல் சட்டங்களையும் மீறி பௌத்த சாசன அமைச்சு மற்றும் இராணுவத்தினர்-கடற்படை உதவியுடன் புதிய பௌத்த மத கட்டுமானங்களை நிறுவி இருக்கின்றார்கள்.
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைக்கு Kottiyarama Sri Pathra Dhathu Raja Maha Viharaya பெயரிட்டு இருக்கின்றார்கள்.இது மாத்திரமின்றி விகாரை சூழலில் பிரமாண்ட புத்தர் சிலை ஒன்றையும் கூட நிறுவி இருக்கின்றார்கள்.
நில அபகரிப்பு
சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட சுடு மண் சிற்பங்கள் சம்பூரை உள்ளடக்கிய மேற்படி பிரதேசம் தமிழ் மக்களின் பல்லாயிரம் வருட பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கின்றன.
ஆனால், வெறும் ஒரு சில வருடங்களில் மத்திய தொல்லியல் திணைக்களம் ஊடக ஆக்கிரமித்து பௌத்த மத நிலமாக அடையாளபடுத்தி இருக்கின்றார்கள்.
குறிப்பாக இப்பகுதியில் மேற்படி விகாரையின் பயன்பாட்டுக்கென்று 300 ஏக்கர் நிலப்பகுதியும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பௌத்த சாசன அமைச்சின் செயலராகவிருந்த பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த ஆக்கிரமிப்புக்ளுக்கு Balalle Ratanasara எனும் பிக்கு தலைமை தாங்குகின்றார்.
இது கடந்த கால அரசாங்கத்தில் ஏற்பட்ட சம்பவமாக காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில், தமிழர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயங்களின் நிலங்களிலும், வழிபாட்டு இடங்களிலும் பௌத்த சிலைகள் மற்றும் கோவில்கள் கட்டப்படுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல்வேறு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
நில ஆக்கிரமிப்பு மற்றும் சமுதாய பாதிப்புகள் சிங்கள பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள், குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் கட்டப்படுவது, ஒரு வகை பாதகங்களை இனங்களுக்கிடையில் ஏற்படுத்துகிறது.
அரசியல் திட்டம் ஊடாக இதனை தடுக்க முடியாது காலத்தை கடத்தி புத்த விகாரைகளை அமைப்பதற்கான முயற்சிகளை பெரும்பான்மை அரசியல் அதிகாரம் பகைத்தவர்கள் செயற்படுகிறார்கள் .
இதன் மூலம், பௌத்த மதத்தை பிரதானமாக கொண்ட சிங்கள சமூகத்தின் கலாசார மற்றும் மத அடையாளத்தை, தமிழர்கள் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் வாழும் பகுதிகளில் நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு, திருகோணமலை மாவட்டம், இளுப்பைக்குளம் பகுதியில், 540 குடும்பங்கள் வாழும் இடத்தில் புதிய பௌத்த கோவிலின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
இது, அந்த பகுதியில் சிங்கள மக்கள் இல்லாத நிலையில், தமிழர்கள் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பொலிஸார் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மூலம், இந்த எதிர்ப்புகளை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வழிபாட்டுக்கான எதிர்ப்பு
அப்போதைய ரணில் விக்ரம சிங்க ஜனாதிபதியாக இருந்த காலம் கிழக்கு ஆளுனராக செந்தில் தொண்டமான் செயற்பட்டார் பல தடைகளையும் பல போராட்டங்டளையும் தாண்டி பௌத்த விகாரை கட்டுமானம் இடம் பெற்றது.
மேலும், 2023 ஆம் ஆண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில், குருந்துர்மலை மலைக்கோயில் பகுதியில், பௌத்த சிலைகள் நிறுவப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, இந்து வழிபாட்டாளர்களின் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பொலிஸாரும், படையினரும், இந்த வழிபாட்டாளர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் சிறுபான்மை சமுதாயங்கள், இந்த நிலம் பறிப்பு மற்றும் பௌத்த சிலைகள் கட்டப்படுவதற்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசியல் அழுத்தங்களால், இந்த நடவடிக்கைகள் பலவீனமாகின்றன.
இது போன்ற நில அபகரிப்பு மற்றும் பௌத்த சிலைகள் கட்டப்படுவதால் சிறுபான்மை சமுதாயங்கள் தங்கள் பாரம்பரிய வழிபாட்டு இடங்களை இழக்கின்றனர். இது, அவர்களின் மத மற்றும் கலாசார அடையாளத்தை பாதிக்கின்றது.
மேலும், இந்த நடவடிக்கைகள், சமூக இடைவெளிகளை அதிகரித்து, சமுதாய இடர்பாடுகளை உருவாக்குகின்றன.
இது போன்று வெருகல் பகுதியில், 2025 ஜனவரி மாதம், தொல்பொருள் திணைக்களம் (Department of Archaeology) ஒரு "1 KM வட்டவான் பகுதி தொல்பொருள் பகுதியாக பதாகை இடப்பட்டது.
இது, அந்த பகுதியை சிங்களமயமாக்க முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் இதற்கு எதிராக போராட்டங்களை நடாத்தினர் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் மற்றும் புத்த மதக் கட்டிடங்கள் அமைக்கப்படுவது, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த அமைப்புகள், தமிழ் மக்கள் இடத்தில் அவர்களின் மத மற்றும் கலாச்சார அடையாளங்களை மாறச் செய்யும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன. இதனால், சமூக அமைதியை பேணுவதற்காக, அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இன நல்லிணக்கம் தொடர்பாக பேசுபவர்கள் வடகிழக்கில் இது போன்ற பூஜா பூமி ,தொல்பொருள் என்ற போர்வையில் தனியார் நிலங்களை அபகரித்து புத்தர் சிலை முளைக்கும் அதிகாரத்தை காட்டுவதை நிறுத்த வேண்டும் அப்போது தான் இன ஒற்றுமை ஐக்கியம் பேணப்படும் அநுர அரசாங்கம் இது விடயத்தில் இனச் சாயம் பூசாமல் இனவாதத்தை தோற்கடிக்க நல்ல உத்திகளை கையாள வேண்டும் என்பதை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |