கிழக்கில் தொடரும் நில அபகரிப்பு! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு தமது கண்டனத்தை வெளியிடுவதுடன் அவற்றுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை சர்வோதயத்தில் நேற்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அமைப்பின் மாகாண பொருளாளர் தட்சணாமூர்த்தி நவஜோதி இந்த கருத்தை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவுற்ற பின்னர் பல ஆட்சியாளர்கள் மாறினாலும் அன்றில் இருந்து இன்று வரை பல சைவ ஆலயங்கள் பௌத்தமயமாக்கப்பட்டு வருகின்றன.
முளைக்கும் புத்தர் சிலை
திருகோணமலையை பொறுத்தவரையில், வெருகல் கல்லடி பகுதியில் உள்ள சைவ ஆலயமான மலை நீலி அம்மன் ஆலயத்தினுள் பௌத்த மதத்தை நிறுவும் முகமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மூதூர் 64ஆம் கட்டை மலையில் பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகின்றது. சைவ ஆலயங்கள் என்பது வாழ்வியலும் நம்பிக்கையுமாகும்.
தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற அநுர அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் அநுர அரசினுடைய ஆட்சியிலும் இது தொடர்ந்து வருகின்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் உகந்தை மலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அப்பகுதியில் 125 அடி உயரமான முருகன் சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரியபோது அங்கிருந்த கடற்படையும், வன வள பாதுகாப்பு திணைக்களமும் அதனை தடுத்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென அவர்களின் முன்னிலையிலேயே அப்பகுதியில் தற்போது புத்தர்சிலை வைக்கப்பட்டுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் சார்பாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை வழங்குவதற்கும் அதேபோன்று எதிர்வருகின்ற நாட்களில் கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டங்களையும் நடத்துவதற்கு தயாராகி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
அதேபோன்று கணபதிப்பிள்ளை இராசலிங்கம் என்பவர் கருத்து தெரிவிக்கும்போது, இந்த அரசு வந்த பின்னரும் வன இலாக திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக வாகரை – நான்காம் கட்டை பிரதேசத்தில் வன இலாகா துறையினர் மக்களுடைய குடிசைகளை எரித்து அவர்களை வெளியேற்றுவதற்கான முனைப்புகளை காண்பித்திருந்தார்கள்.
அதேபோன்று சேருவில – தங்கநகர் கிராமத்தில் குடியிருப்பு காணி ஒன்றில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக குறிப்பிட்டு அதனை அபரிக்கவும் முயற்சித்து வருகின்றார்கள்.
அது மட்டுமல்லாமல் முத்துநகர் கிராமத்திலும் 22 பேரின் விவசாய காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று சம்பூர் பகுதியில் விவசாயிகளின் காணிகளை சோலர் மின்வலுத் திட்டத்திற்காக கையகப்படுத்தியுள்ளனர்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது கடந்தகால அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |