கல்முனையில் போதைப்பொருள் எதிர்ப்பு மாநாடு முன்னெடுப்பு
போதைப்பொருள் தொடரில் பாடசாலை மாணவ, மாணவிகளை விழிப்பூட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் "போதைப்பொருள் எதிர்ப்பு மாணவிகள் மாநாடு" ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்று (17) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில், பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பு மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு என்பன சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலோசனைகள்
நிகழ்வில் பிரதான பேச்சாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளவள வைத்தியர் யூ.எல்.சறாப்தீன் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்வின் போது, போதைப் பொருள் எதிர்ப்பு கொடியினை சாய்ந்தமருது - 05 ஆம் பிரிவு சமுர்த்தி சமுதாய அமைப்பின் நிர்வாகிகளால் அதிதிகளுக்கு அணிவிக்கப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருளுக்கு எதிரான சுலோகத்தில் அதிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒப்பமிட்டு தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
விசேட நிகழ்வு
இந்த நிகழ்வில் விசேட அம்சமாக போதைப் பொருட்கள் எவ்வாறு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றது, அவர்கள் எவ்வாறு இப்பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்த்தும் குறுந் திரைப்படத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் தயாரித்து வழங்கியிருந்தார்.
மேலும், இந்நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



