இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட ஈரான் யுத்த கப்பல்! வீரமரணமடைந்தவர்களின் இரத்தத்திற்கு பழிவாங்குவோம் - ஈரானின் எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட ஈரான் கப்பலில் உயிரிழந்த கடற்படை அதிகாரிகளின் மரணத்திற்கு எதிரிகள் கொடிய பதிலடி சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரத்தத்திற்கு பழிவாங்குவோம்
எதிரியின் குற்றத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். எங்கள் வீரமரணமடைந்தவர்களின் இரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம் என்று டேனா அழிப்புக் கப்பலில் உயிரிழந்த வீரர்களை குறிப்பிட்டு ரியர் அட்மிரல் இரானி தெரிவித்துள்ளார்.
எதிரி சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து கொடிய தாக்குதல்கள் மூலம் நாங்கள் அவனைத் தண்டிப்போம் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 4 அன்று, இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படையின் தேனா போர்க்கப்பல், இலங்கையின் காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட MK-48 டார்பிடோவால் தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் மொத்தம் 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 32 கடற்படையினர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரிஸ் தேனா கப்பல்
ஈரானிய தேசத்திற்கு எதிரான போரின் மத்தியில், சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையால் குறிவைக்கப்படுவதற்கு முன்பு, ஐரிஸ் தேனா கப்பல் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய கடற்படையால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தது.

உலகளாவிய சீற்றத்தையும் கண்டனத்தையும் பெற்ற இந்தத் தாக்குதலை அமெரிக்கப் போர்ச் செயலர் பீட் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோவால் ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்ட முதல் சம்பவம் இது என்று அவர் விவரித்தார்.
ரியர் அட்மிரல் Shahram Irani, இந்த துயரச்சம்பவத்தால் நாடு துயரத்தில் இருந்தாலும், வீரமரணமடைந்தவர்களின் இரத்தத்திற்கு பதிலடி கொடுக்க ஈரான் இராணுவம் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இன்று நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தில் இருந்தாலும், இறைவனின் அருளால் எதிரியை மண்டியிட வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் பதிலடி
ஈரானின் பதிலடி வழக்கமான போர்க்களங்களைத் தாண்டியும் விரிவடையக்கூடும் என்பதையும், எதிர்பாராத களங்களில் எதிரியின் சொத்துக்களைக் குறிவைக்கும் சாத்தியமான நடவடிக்கைகள் இருக்கலாம் என்பதையும் கடற்படைத் தளபதியின் எச்சரிக்கை உணர்த்துகிறது.

IRIS Dena கப்பலில் உயிரிழந்த வீரர்களுக்கான இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் என்றும், மறுநாள் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க-இஸ்ரேலியப் போர்க் கூட்டணி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது எவ்விதத் தூண்டுதலுமின்றி ஒரு ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்து, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமெனி மற்றும் பல உயர்மட்டத் தளபதிகளைப் படுகொலை செய்தது.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள் இதுவரை 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்' என்ற பெயரில் 56 கட்டங்களாகத் தாக்குதல்களை நடத்தி, பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய இராணுவத் தளங்களையும் அமெரிக்க இராணுவ முகாம்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளன.