இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு
இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கடன் வசதி தொடர்பான ஒப்பந்தங்கள்
சந்திப்பைத் தொடர்ந்து, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதி தொடர்பான ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இக்கடன் வசதியானது, டித்வா புயலுக்குப் பின்னர் இந்தியா இலங்கைக்கு அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள்கட்டமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொள்ளப்படவுள்ள பணிகள்
இந்த நிதியின் ஊடாகப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பேரிடருக்குப் பின்னர் ஏற்பட்ட கொள்வனவுத் தேவைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக மீளக் கட்டியெழுப்பவும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளதை இந்த ஒப்பந்தப் பரிமாற்றம் எடுத்துக்காட்டுகின்றது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.