பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்க வேண்டும் : இம்ரான் எம்.பி கோரிக்கை
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் அரசியல்வாதிகளை நீக்கி கல்வி சார்ந்தோரை நியமியுங்கள் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய இன்றைய தினம் (19) கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை சட்டத்தின்படி இப்பணியகத்திற்கு முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
நிர்வாக நடவடிக்கைகள்
மாகாண அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுநரினால் இந்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.
பாலர் பாடசாலை பணியகத்தின் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வெற்றிபெற்று தற்போது பிரதேச சபையொன்றின் தவிசாளராக நியமனம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கல்வி நிர்வாகத்தில் நேரடி அரசியல் தொடர்பு உள்ளவர்கள் இருப்பது பொருத்தமானதல்ல என்பதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.
அதேபோல கல்வித்துறை தொடர்பில்லாதவர்கள் இப்பணியகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் சரியான நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியாதுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதனால் பாலர் பாடசாலை ஆசிரியைகளும், உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைகள் தான் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலக் கல்வியை நிர்ணயிப்பவை. எங்களை விட கல்விப் பாண்டித்தியமும், கல்வி நிர்வாகத் திறனும் கொண்ட தாங்கள் இதனை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
எனவே, கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை மாணவர்களின் உயரிய நலனைக் கருத்தில் கொண்டு பாலர் பாடசாலை பணியக முகாமைத்துவ குழுவை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |