சுவனத்தில் நபியவர்களுடன் வாழ விரும்பியவர்
ஹஜ்ரத் ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது,
”நான் இரவு நேரங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தங்கியிருந்து, தஹஜ்ஜூத் தொழுகைக்கு உளுச் செய்வதற்காக தண்ணீர், மிஸ்வாக், முஸல்லா போன்ற தேவையான பொருட்களை நபியவர்களுக்குத் தயார் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.
ஒரு தடவை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய பணிவிடையை கண்டு மகிழ்ச்சியடைந்து
”உமக்கு விருப்பமானதை என்னிடம் கேட்பீராக!” என்று கூறினார்கள். அப்பொழுது நான் ”சொர்க்கத்தில் தங்களுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்” என்று கூறினேன்.
”வேறு ஏதாவது உமக்கு வேண்டுமா?” இதுமட்டும் போதுமா என்று கேட்டார்கள். இதுமட்டும் தான் என்னுடைய நோக்கம், வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று கூறினேன்
”நல்லது அவ்வாறானால் அதிகமான சுஜூதுக்களை கொண்டு அது விஷயத்தில் எனக்கு உதவி செய்வீராக!” என பதில் அளித்தார்கள்.
வெறுமனே துஆவை கொண்டு மட்டும் நம்பி உட்கார்ந்துவிடக்கூடாது, அமல்கள் செய்வதும் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது, மேலும் அமல்களில் மிக முக்கியமானது தொழுகையாகும்.
தொழுகை எவ்வளவு அதிகமாக நிறைவேற்றப்படுகிறதோ அவ்வளவு சுஜூதுகள் அதிகமாகும்.
அல்லாஹ்வின் நல்லடியார்களுடைய துஆ மிக முக்கியமானதும் தேவையானதும்தான் என்பதில் சந்தேகமில்லை.
அதேநேரத்தில் அதிகமான சஜூதுக்களை கொண்டு எனக்கு உதவி செய்வீராக என்ற நபி(ஸல் அவர்கள் அந்த ஸஹாபியவர்களுக்கு கூறியதையும் நான் நினைவில் கொள்ள வேண்டும்.