வயிற்றில் மறைத்த போதைப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
தங்காலையிலிருந்து மாகும்புர நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததையடுத்து உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பஸ்நாயக்ககே குணரத்ன என்பதும், ஒரு பிள்ளையின் தந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, அவருக்கு திடீரென கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் தங்காலை பேருந்து நிலையத்திற்கு வந்த நிலையில், திடீரென தரையில் விழுந்து கடுமையாக துடித்துள்ளார்.
இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவரது கை, கால்களை கட்டி, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தங்காலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும், சிகிச்சை அளிக்கப்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்காலை ஆதார மருத்துவமனையில் மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றுக்குள் ‘ஐஸ்’ என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கொண்ட இரண்டு பாக்கெட்டுகள் (தலா 20 கிராம் எடையுடையவை) இருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றில் ஒரு பாக்கெட் வயிற்றுக்குள்ளேயே வெடித்ததே மரணத்திற்கு காரணமாக இருந்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.