பகிடிவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி அமைச்சு அதிரடி முடிவு
பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasooriya) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “1978/16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் நாட்டில் அமைந்துள்ள 17 பல்கலைக்கழகங்களில் எந்த பல்கலைக்கழத்திலும் பகிடிவதைகள் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் எவ்வித வழக்கும் தொடரப்படவில்லை.
சுற்று நிருபம் மறுசீரமைப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள பகிடிவதைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பந்தமாக சுற்றுநிருபத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உள்ளாக்கி அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முறைப்பாட்டு செயற்பாட்டு பொறிமுறையை மிகவும் பலப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.
இப்போதுள்ள துரித தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பகிடிவதை தொடர்பான முறைப்பாடு
அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு எதிரான செயலணியை அமைத்து ஆண், பெண் சமூக சமத்துவ குழுவின் கீழான இணைக்குழுக்களின் ஊடாக வலையமைப்புகளை உருவாக்கி எந்தவொரு பகிடிவதை தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றை செயற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |