அரசாங்கம் பிழையான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வக்பு சபை நியமனத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பதவிகளை இலஞ்சமாக வழங்கி, பிழையான முன்னுதாரணத்தை காட்டியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உறுப்பினருக்கு, பிரதி உபகாரமாக வக்பு சபையில் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு தெளிவான அரசியல் இலஞ்சமாகும். இவ்வாறான நியமனங்கள் தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்னர் முன்னெடுத்த பிரசாரங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.
கடந்த காலங்களில் நிலவிய பிழையான அரசியல் கலாசாரத்தை மக்கள் வெறுத்த காரணத்தினாலேயே புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தனர்.
குறிப்பாக, முஸ்லிம் மக்களும் பாரம்பரிய கட்சிகளை விடுத்து மாற்றத்தை எதிர்பார்த்தே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தனர்.
ஆனால், தற்போதைய இத்தகைய செயற்பாடுகள் மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளன. இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துகளைப் பாதுகாக்கும் மிக உயரிய சபையாக வக்பு சபை காணப்படுகின்றது.