வனவள திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை முன்வைப்பு
திருகோணமலை - வெல்வேரி கிராமத்திலுள்ள வனவள திணைக்களம் வசமுள்ள தங்களது காணிகளை விடுவிக்க வேண்டும் என கிராமத்தில் வாழும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த கிராமத்தில் பல தசாப்த காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர்.
கடந்த 1983ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீளக் குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த பகுதியில் வனவள பாதுகாப்புத் திணைக்களம் எல்லைக்கற்கள் நட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பூர்வீக காணிகள்
1970 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே 30இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும், வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்குள் தாங்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களாக வீட்டின் சிதைவுகள், பல கிணறுகள், நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்ட கால்வாய்கள் உட்பட பல ஆதாரங்களும் தமது காணிக்கான ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தமது காணியைச் சுற்றியுள்ள ஏனைய பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறுகிய பரப்பளவைக் கொண்ட தமது காணிகள் மாத்திரம் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 40 ஏக்கருக்கு மேற்பட்ட தமது பூர்வீக காணிகளை விடுவித்து, தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோடு நாட்டின் நெல் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்குமாறும் அநுர அரசிடம் கோரிக்கை விடுப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |