யாழில் போதைப்பொருள் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐவர் கைது
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் மற்றும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை(29.08.2023) மற்றும் நேற்று முன்தினம் புதன்கிழமை(30.08.2023) ஆகிய இரு தினங்களும் , கடற்படையினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது , அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு , போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டிருந்தமையை கண்டறிந்துள்ளனர்.
வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய் , மாதகல்ம் மற்றும் ஊவா மாகாணம் , குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம் ,மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும் , மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை
தெரிவித்துள்ளது. -



