காரைதீவில் எலிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு!
காரைதீவில் எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கும்,பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த களப்பணியானது காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வசீரின்(Thaslim Wazeer) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், இதன்போது மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
புதிய நோய்
இதன் ஒரு அங்கமாக எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் சடுதியான மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக வெளியான செய்திகளுக்கு அமைய, இந்த காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால் லெப்டோஸ்பிரோசிஸ் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த Leptospirosis என்பது சிறு விலங்குகள், குறிப்பாக எலியின் சிறுநீரின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்த நோய் cane-cutter's கரும்பு வெட்டிகளின் நோய் என்று ஐரோப்பாவிலும், "rice field jaundice , அரிசி வயல் காமாலை என்று சீனாவிலும் " "Akiyami இலையுதிர் காய்ச்சல்" என்று ஜப்பானிலும் அறியப்பட்டிருக்கிறது.
இருந்தாலும் இப்போது உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த மீண்டும் வளர்ந்து வரும் re-emerging நோயாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
விரைவான, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் மோசமான சுகாதாரம் , அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, வளரும் நாடுகளில் கடுமையான காய்ச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான முக்கிய காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் லெப்டோஸ்பைர்களை எடுத்துச்செல்வதால், அவ்வாறான இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
நோய்க்கான காரணம்
சுகாதார ஊழியர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள், மீனவர்கள், கொறித்துண்ணிகளினால்(Rodents) கடிபடுபவர்கள், நீரில் விளையாடுபவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர்.
லெப்டோஸ்பைரோசிஸ் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வன விலங்குகளின் சிறுநீரானது வெள்ள நீர், ஆறு, குளம் போன்ற பெரும் நன்னீர் நிலைகளில் கலப்பதால் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.
இப்படியான அசுத்த நீர் காயங்களில் படுவதால், அந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் அல்லது குடிப்பதால் மனிதர்களை இந்த நோய் தொற்றிக் கொள்கிறது.
எனவே வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர், குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெள்ளம் பார்க்க செல்வதை தவிர்த்தல், கொதித்து ஆறிய சுத்தமான நீரை பருகுதல், விவசாய வேலைகளுக்கு பூட்ஸ் சப்பாத்து அணிதல், காலில் உள்ள காயங்களை மூடி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.
அத்துடன் அதிக காய்ச்சல் தலைவலி உடல் வலி கண் மஞ்சளாதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் உசிதமானது.
அது போல பிரதேசங்களில் எலி காய்ச்சல் பரவினால் இந்த நோய் உங்களுக்கு ஏற்பாடாமல் இருக்க தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எலிக்காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ள, இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ள பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அல்லது வைத்தியசாலைகளை நாட முடியும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்தல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

